Pages

Monday 30 December 2013

Is Gold Really An Investment? My 14th Article About GOLD on 30th December, The Hindu Tamil Edition...



தங்கம் ஒரு சிறந்த முதலீடா? -பா. பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01703/B823786142Z_1_2013_1703036h.jpg

இந்தியாவில் தங்கத்தை விரும்பாதவர்கள் ஒருவரும் இல்லை. பல ஆண்டுகளாக அதன் விலை உயர்ந்து கொண்டே வந்ததும், குறிப்பாக கடந்த 5 முதல் 7 ஆண்டுகளின் வளர்ச்சி, எல்லோருக்கும் அது ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் என்ற நம்பிக்கை வந்ததற்கான காரணமாகும்.
நாம் தங்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆபரண தங்கம், அன்றாடம் அணிந்துகொள்வது, அணியாதபோது அதை லாக்கரில் வைப்பது. பெரும்பாலும் இந்த வகையான தங்கம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொடுப்பது என்பது தொன்று தொட்டு வரும் ஒரு பண்பு அல்லது வழக்கம் என்றும் கூறலாம். மற்றொன்று தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதி வாங்குவது. இதை நகைக்கடைகளில் தங்கமாகவும், தங்க சீட்டிலும் வாங்குவது. மற்றொன்று காகித தங்கம்.
தங்கம் வாங்குவதற்குப் பொதுவான காரணம், நமக்கு வேண்டும்பொழுது அதை விற்று காசாக்கி கொள்ள முடியும் என்று ஒரு கூற்று. நடைமுறை வாழ்க்கையில் எந்த பெண்ணும் அதற்கு உடன்படுவதில்லை. பெரும்பாலும் அது ஒருவரிடத்தில் இருந்து மற்றவருக்கு (சந்ததி சந்ததியாக) ரிலே ரேஸ் போல சென்று கொண்டே இருக்கிறது.
தங்கத்தை பற்றிய உண்மை
நான் கூறப்போகும் தங்கத்தை பற்றிய உண்மையை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், ஆனால் இது மிகவும் உண்மையான ஒரு விஷயம். நாம் தங்கத்தை வாங்குவதற்கு அமெரிக்க டாலரை தான் உபயோகப்படுத்துகிறோம்.
உலக நாடுகளில் தங்கத்தை ட்ராய் அவுன்ஸில் அளவிடுகிறார்கள். ஒரு அவுன்ஸ் 31.1 கிராமுக்கு சமம். ஏறக்குறைய 4 பவுன் என்று நம்முடைய கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். 1980ம் ஆண்டு ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் 850 அமெரிக்க டாலர், அதே தங்கம் 2000ம் ஆண்டு 270 டாலருக்கு வந்து, மீண்டும் 2008ம் வருடம் 850 டாலரை எட்டுகிறது. 28 வருடம் உலக சந்தையில் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை. பணவீக்கத்தை கணக்கில் எடுத்துகொண்டால் அது மைனசில் சென்றுவிடும். அதே சமயம் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாயிலிருந்து 48 ரூபாய் வரை வந்துவிட்டது. இதனால் இந்தியாவில் தங்கம் எப்போதும் உயர்ந்தே காணப்பட்டது.
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் 1930 டாலராக இருந்தது, இப்போது 1200 டாலர், அதாவது ஏறக்குறைய 38% வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த கால கட்டத்தில் 46 ருபாய் இருந்த டாலரின் மதிப்பு இப்போது 62 ரூபாயாக மாறி உள்ளது. ஆதாவது 35% டாலர் அதிகரித்ததால் இங்கு பெரிதாக விலை குறையவில்லை.
உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், இங்கிருந்து ரூபாய் இன்னும் 5 வருடத்தில் எங்கு இருக்கும்? மேலும் உலகசந்தையில் ஏறி இருக்குமா இல்லை இறங்கி இருக்குமா? கண்டிப்பாக கரன்சி பெரிதாக ஏற வாய்ப்பில்லை. உலக சந்தையிலும் இறங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய என செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மற்றொரு தகவல் ஒரு நாடு முன்னேற்றம் அடையும்போது அந்த நாட்டின் கரன்சி அதிகரிக்குமே தவிர குறையாது.
இந்தியாவில் தான் நிறைய மக்கள் 25 முதல் 35 வயது வரை உள்ளார்கள் என்று ஒரு ஆய்வில் கூறுகிறார்கள். அதனால் நம் ரூபாயின் மதிப்பு கூடுவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.
இன்று நிறைய பேர் தங்கத்தை வங்கிகளில் வாங்குகிறார்கள், அது மிக மிக தவறான ஒரு செயல். முதலில் அந்த தங்கம் 24 காரட், மேலும் அதை மீண்டும் வங்கியில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஆபரண தங்கத்தைவிட அது 15% கூடுதல் விலை. நாம் வாங்கினால் நம் வீட்டின் வரவேற்பறையில் கூட வைக்க முடியாது. அதை நகைக்கடையில் கொடுத்து தான் பணமாகவோ அல்லது ஆபரணமாகவோ வாங்கி கொள்ளமுடியும். தங்கத்தை வைத்து நமக்கு யாரும் மாதா மாதம் பணம் தரப்போவதில்லை. அதை விற்கும்போது செய்கூலி, சேதாரம் போக நாம் வேறு நகையாக வாங்கமுடியும். பணம் வேண்டும் என்றால் தங்கத்தின் மதிப்பில் இன்று 4% எடுத்துக்கொண்டு அதுவும் காசோலையாக தான் பெரிய நகைக்கடைகளில் கொடுக்கிறார்கள்.
இன்றைய யுவதிகளுக்கு தங்கத்தில் அதிகம் நாட்டமில்லை, மேலும் அவர்களுக்கு அதை லாக்கரில் வைத்து எடுப்பதில் துளிக் கூட இஷ்டமில்லை. அதனால் அவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய டிசைனர் வகை ஆபரணங்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் இன்னும் நம்முடைய சமூகத்தில் திருமணம் என்றால் நகையைத் தவிர்க்க முடிவதில்லை. சிறந்த வழி என்னவென்றால், நாம் தினசரி அணியும் நகைகளை மட்டும் அணிந்து கொண்டு, குழந்தைகளின் திருமணத்திற்காக காகித தங்கமாக சேமித்தல் சிறந்தது. அதைவிட சிறந்தது, வேறு ஏதாவது ஒன்றில் இன்வெஸ்ட்மென்ட் செய்து அந்த பணத்தை திருமணத்தின் சமயம் தங்கமாக மாற்றிகொள்ளலாம்.
எந்த ஒரு முதலீட்டிலும் நேரடியாக பணத்தை வாங்கிகொண்டாலோ அல்லது அந்த முதலீடு ஒரு ஒழுங்கு முறை கட்டுபாட்டின் கீழ் வரவில்லை என்றால் அந்த மாதிரி முதலீடு மிகவும் ரிஸ்க்கான விஷயம். இன்று நிறைய கருப்பு பணம் இந்த முதலீட்டில் உள்ளது. மற்ற முதலீடுகள் என்றால் ஒருவர் எவ்வளவு வைத்துள்ளார் என்று எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த முதலீட்டில், அது மிக மிகக் கடினம் என்றே சொல்லலாம்.
முதலீடு என்பது வளரக்கூடியதாக இருக்க வேண்டும். அது அவ்வப்போது நமக்கு வட்டியோ அல்லது டிவிடென்டோ தரவேண்டும். அதை விற்கும்போது மட்டும் பணம் தந்தால் அது சிறந்த முதலீடாக இருக்க முடியாது. உலகின் மிக பெரிய பணக்காரரில் ஒருவரும் மிகச்சிறந்த முதலீட்டாளருமான வாரன் பப்பெட் என்பவர் தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதுவதில்லை. எந்த ஒரு கமாடிட்டியுமே ஒரு சிறந்த முதலீடு கிடையாது ஏனெனில் அதை ஒரு நம்பிக்கையின் பேரில் நாம் வாங்குகிறோம், நம் நம்பிக்கை பொய்த்துப்போக வாய்ப்புள்ளது. அதே பணத்தை ஒரு பிசினசில் முதலீடு செய்யும்பொழுது, அது பல மடங்கு வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.
சாராம்சம்:
தங்கம் ஒருவருக்கு தேவை, மேலும் அது சமூகத்தில் அந்தஸ்து கொடுக்கிறது, நம்முடைய உறவினர்கள் நம்மை மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் வாங்கலாம். ஏனெனில், அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதைவிடுத்து அது ஒரு முதலீடு, நாளை நல்ல ரிடர்ன் கொடுக்கும் அல்லது கடந்த பத்து ஆண்டுகளை போல விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நினைப்பில் வாங்குவது மிகவும் தவறு.

Monday 23 December 2013

"Equity Investment is a Magical Key"! - My 13th Article in The Hindu Tamil Dated 23rd December 2013



ஈக்விட்டி என்னும் மந்திர சாவி! -  பா. பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01695/equity_1695477h.jpg
இன்று பெரும்பாலோருக்கு ஈக்விட்டி என்றாலே பயம். எப்பொழுதுமே நமக்கு பயமான ஒரு விஷயம் என்றா​​ல் ,அதற்கு பலதரப்பட்ட உருவம் கொடுத்து அதை இன்னும் பயங்கரமாக மாற்றுவது நம்முடைய வழக்கம்!

ஈக்விட்டி என்பது ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு நாம் பகுதி சொந்தக்காரர், இதை ஆங்கிலத்தில் (PART OWNER) என்று சொல்வார்கள். இன்று நமக்கு எத்தனையோ பிசினஸ் பிடித்துள்ளது, நம் கண் முன்பே அந்த பிசினஸ் செய்பவர்கள் பெரிதாக வளர்ந்தார்கள், மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள், நாம் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு என்னையும் சேர்த்துக்கொள் என்றால் யாரும் நம்மை எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் அந்த நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது நாம் அவர்களுடன் இணைகிறோம்.

நம் எல்லோருக்கும் தெரியும், பிசினஸ் என்பது ரிஸ்கான விஷயம் என்று, இருந்தாலும் அதில் கிடைக்கம் பணம் நாம் ஒருவரிடத்தில் வேலை செய்தால் நிச்சயம் கிடைக்காது. அதற்கு பல தகுதிகள் வேண்டும், நிறைய பேர் பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் அதில் இறங்குவதில்லை. நாம் தெரியாமல் ஒரு பிசினசில் இறங்கி பிசினசைக் குறை சொல்வது நியாயமாகாது. அதே சமயம் பிசினஸ் நேற்று ஆரம்பித்தவுடன் மறுநாளே வெற்றி அடையாது. நாம் பலதரப்பட்ட சோதனைகளைச் சந்திக்க நேரிடும். இது எல்லாவற்றிலும் வெற்றி கொள்பவனே பெரிய பிசினஸ்மேன் ஆகிறான். மற்றவர்கள் பொறுமை இல்லாமல், அதில் உள்ள நெளிவு சுளிவு தெரியாமல் இறங்கி அவதிப்படுகிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டுவது என்னவென்றால், பிசினஸ் நன்கு அறிந்து, பொறுமையுடன் இருந்தால் கண்டிப்பாக ஓரளவிற்காவது நாம் வெற்றி காண முடியும். வெற்றி பெற்றவர்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயம், நான் பணம் சம்பாதித்தது போக என்னால் 100 பேருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க முடிந்ததை பெரிய விஷயமாக கருதுகிறேன், அதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

சுமார் 20 முதல் 25 வருடங்களுக்கு முன்பு சினிமாக்களிலும், பத்திரிகையிலும் வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி நிறைய செய்திகள் இருக்கும். இன்று நிறைய பிசினஸ்மேன் தனக்கு தகுந்த ஆள் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்களே தவிர யாரும் வேலை கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை. ஒரு ஆய்வில் சொல்கிறார்கள்இன்று படிக்கும் பலர் இதுவரை இல்லாத ஒரு வகையான வேலை வாய்ப்பிற்கு தங்களை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள்”. இது எல்லாவற்றிற்கும் காரணம் நிறைய தொழில் அதிபர்களை நாம் மீண்டும் மீண்டும் உருவாக்கி கொண்டே இருப்பதுதான்.

இந்த மாதிரி நிறுவனங்கள் முதலீட்டாருக்கு இரண்டு வாய்ப்புகளை எப்பொழுதும் தருகிறார்கள். ஒன்று என்னிடம் பணம் கொடுங்கள் நான் உங்களுக்கு வட்டி தருகிறேன். இன்னொன்று என்னுடைய பங்கை வாங்கி நீங்களும் பகுதி சொந்தக்காரர் ஆகுங்கள் என்று. நமக்கு அது நன்றாக வளரும், நல்ல கம்பெனி என்ற எண்ணம் உள்ளது, ஆனாலும் அதில் முதலீடு செய்ய விருப்பமில்லை.

ஏன் நிறுவனங்கள் வங்கியில் அதிகம் கடன் வாங்குவதில்லை, பொது மக்களிடம் பங்கை விற்று பணம் வாங்கி கொள்கிறார்கள், அவர்கள் நம்மை ஒரு பார்ட்னராக அங்கீகரிப்பதால்தான். அந்த பிசினசில் கிடைக்கும் ஒரு தொகையை நமக்கு டிவிடெண்ட் என்று தருகிறார்கள் அதை தவிர அந்த பங்கு நாளடைவில் வளரவும் செய்கிறது. நீண்ட கால அடிப்படையில் ஒரு பிசினஸ் அதிகமாக வளருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஒருவர் 1980ல் 10,000 விப்ரோ பங்கில் முதலீடு செய்திருந்தால் இன்றைய மதிப்பு ஏறக்குறைய 500 கோடி. இது மாதிரி நிறைய உதாரணங்கள், ஆனால் ஒருவருக்கும் பொறுமை கிடையாது. எய்சேர் மோட்டார் (EICHER MOTORS) என்பீல்டு புல்லட் தயாரிக்கும் நிறுவனம், அதனுடைய பங்கின் (8/4/2009ல்) மதிப்பு 184 ரூபாய், இன்னும் 5 வருடம் ஆகவில்லை அதனுடைய மதிப்பு Rs.5073. 5073/184=27.5 மடங்கு. இந்தப்பங்கை நாம் வாங்கி இருந்தால் கூட நாம் இவ்வளவு காலம் பொறுமையாக இருக்கமாட்டோம். ஈக்விட்டி முதலீடு ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும், அதை விடுத்தது பணத்தை ப்ராபர்டியில் முதலீடு செய்தால் பணமுடக்கம் ஏற்படும், நாடு முன்னேறாது.

நாம் ஒரே ஒரு கம்பெனியின் பங்கை வாங்கும்பொழுது அது கண்டிப்பாக ஒரு செக்டாரில் தான் இருக்கும். அது மிகவும் ரிஸ்க் அதற்கேற்ப ரிடர்னும் அதிகம். அதே பணத்தை மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு செய்யும் பொது பல துறையை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைவு, அதற்கு ஏற்ப ரிடர்னும் கொஞ்சம் குறைவு. இன்று நம் பலதரப்பட்ட வேலையில் மூழ்கி இருப்பதால் மியூச்சுவல் ஃபண்ட் நல்ல தேர்வு.

பெரும்பாலும் இந்த திட்டங்கள் யாவும் 5 முதல் 7 ஆண்டு இணைந்திருக்கவேண்டும். நிறைய பேர் 2008ல் சந்தை உச்சத்தில் இருக்கும்பொழுது தொடங்கி அதுவும் துறை சார்ந்த முதலீடான பவர், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் முதலியவற்றில் முதலீடு செய்து இதன் மேல் குறை சொல்வது தவறு. இந்த முதலீட்டிற்கு ஒரு ட்ராக் ரிகார்ட் உள்ளது, நீண்ட கால அடிப்படையில் எப்போதுமே நல்ல ரிடர்ன் கொடுத்துள்ளது. ஆனால் கடந்த 6 வருட காலமாக சிறப்பாக செயல்படவில்லை என்பதால் முதலீட்டாளர்க்கும் இதன் பேரில் நம்பிக்கை இல்லை. இது முற்றிலும் தவறான அணுகுமுறை.

எந்த ஒரு முதலீட்டிலுமே நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் எல்லோரும் செய்வதை நாம் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் அந்த லாபத்தை நாம் நிறைய பேருடன் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். கடந்த 5 முதல் 6 வருடம் ரியல் எஸ்டேட் நல்ல ரிடர்ன் கொடுத்துள்ளது, வரும் 5 வருடங்களில் இதில் ரிடர்ன் எதிர்பார்ப்பது நல்லதில்லை. ஈக்விட்டி வரும் 5 வருடங்களில் நிறைய லாபம் தருவதற்கான வாய்ப்பு அதிகம்.

நான் ரியல் எஸ்டேட் குறைந்த வாடகை தான் தருகிறது என்றால் நிறைய பேர் அதனுடைய மதிப்பும் கூடுகிறது என்று சொல்கிறார்கள். உதாரணமாக நீங்கள் 5 வருடம் முன்பு ஒரு வீடு வாங்கினீர்கள் என எடுத்துகொண்டால் அதன் மதிப்பு 40 லட்சம். அதற்கு மாதம் 40,000 EMI கடந்த 5 ஆண்டுகளில் ஒருவர் 60*40=24 லட்சம் கட்டியிருப்பார்கள். அது பாதுகாப்பான வங்கி RD 8% வட்டியில் போட்டிருந்தால் அதன் மதிப்பு 29.50 லட்சம். சென்னையை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் எந்த வீடும் 50% உயரவில்லை. அப்படி உயர்ந்தது என எடுத்துக்கொண்டால் அதனுடைய மதிப்பு 60 லட்சம். நம்முடைய 29.5 லட்சம் வட்டியை சேர்த்தால் 69.5 லட்சம் ஆகிவிடும். இன்றைய கால கட்டத்தில் மிக அதிக விலை உள்ளதால் தவிர்க்கவும், முடிந்தால் நீங்கள் கம்மியாக வாங்கி இருந்தால் 2வது, 3ஆவது வீட்டை விற்பதற்கு சரியான தருணம்.

உதாரணமாக எல்லோரும் சனி கிரகத்தை இவ்வாறு சொல்வார்கள், சனியை போல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை. நீண்ட கால முதலீடு சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ போட்டால் நிறைய கொடுக்கும் அதைவிடுத்து தினசரி ட்ரேடிங் செய்தால் அல்லது குறைந்த கால முதலீடு நோக்கத்துடன் வந்தாலும் எல்லாவற்றையும் இழக்க வேண்டும். ஈக்விட்டி நமக்கு கிடைத்துள்ள மந்திர சாவி, அதை ஒழுங்காக பயன்படுத்தினால் நம்முடைய எல்லாவிதமான பணக்கஷ்டங்களையும் திறக்ககூடிய சாவி என்று சொன்னால் மிகையாகாது.