Pages

Monday 28 July 2014

My 43rd Article In the Hindu Tamil Today 28th July 2014, About Debt Restructuring? - Find out

கடனை குறைத்து முதலீட்டை அதிகரிப்போம்  - பா.பத்மநாபன்

 


பல்வேறு முதலீட்டு வகைகளையும் அதன் செயல்பாடு, அதனுடைய ரிஸ்க் மற்றும் வருமானம் முதலியவற்றையும் பார்த்தோம். பலர் என்னிடம் பணம் இல்லை, இருந்தால் தானே முதலீடு செய்வது பற்றி எல்லாம் யோசிப்பது என்று கேட்டிருந்தார்கள்.

முதலீடு செய்ய முடியாததற்கு காரணம் அவர்களிடம் கடன் அதிகமாக இருப்பது. ஒன்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவுகளை குறைக்கவேண்டும். வருமானத்தை அதிகரிப்பது அவ்வளவு எளிதல்ல; செலவை குறைப்பது என்பது ஓரளவிற்கு சாத்தியம். கடன் என்பது நோயை போன்றது. சிலர் ஆரம்பத்திலேயே அதை உணர்வர். பலர் காலம் கடந்த பின்புதான் அதை உணரு வார்கள்.

கடன் வாங்கியவர்கள் எவ்வளவு உழைத்தாலும் ஓட்டை வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்வது போலத்தான். எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், தரமான வாளியை உபயோகித்தாலும் அந்த ஓட்டையை அடைக்காவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதேபோல நம்முடைய கடனும். கொஞ்சம் உற்று நோக்கினால் ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதத்தில் இருக்கும். இதை அறியாமல் பலர் அதை தொடர்ந்து கொண்டே இருந்தால் நஷ்டம்தான் வரும்.

கடன்கள் பலவகை
கடன்களில் பொதுவானவை வீட்டுக்கடன், தனி நபர் கடன்- வங்கி மற்றும் சில நிறுவனங்களில் வாங்குவது, நிறைய பேர் கந்து வட்டி என்று சொல்லகூடிய மிக அதிகம் உள்ள வட்டியை தனி நபரிடம் வாங்குவது. கிரெடிட் கார்ட், இன்ஷூரன்ஸ் பாலிசி, வீடு மற்றும் தங்கம் போன்ற பொருள்களை வைத்து கடன் வாங்குதல் என்று நிறைய வகைகள் உண்டு. இதில் எல்லா கடனும் ஒரே வட்டி விகிதம் கொண்டதல்ல. கந்து வட்டி மிக அதிகம், வீட்டுக் கடன் வட்டி மிகக்குறைவு.

முடிவு எப்போது?
கடன் வாங்குபவர்களில் பலருக்கு தற்போதைய தேவை தான் பெரியதாக உள்ளது, அதிலிருந்து மீளப்போகிறோம் என்று மிகப்பெரிய கடனில் மாட்டி கொள்வதுண்டு. இதை புரிந்து கொள்வது என்பது ஒன்றும் கடினமான செயல் இல்லை. நீங்கள் வாங்கக்கூடிய கடன் மற்றும் நீங்கள் செலுத்தவேண்டிய மாதத் தவணை எத்தனை மாதங்களுக்கு என்று எளிதில் உணர முடியும். மாதத் தவணையை, நாம் கட்டக்கூடிய மாத எண்ணிக் கையுடன் பெருக்கினால் நாம் செலுத்த வேண்டிய தொகை தெரிந்து விடும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினால் உங்களால் எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.

ஒருவர் வீட்டுக்கடன் ரூ. 25 லட்சம் வாங்குகிறார், அதற்கு வட்டி 11%, கால அவகாசம் 20 வருடம் என்றால் அவர் கட்டக்கூடிய மாத தவணை ரூ. 25,805. அதை 240 மாதங்களுடன் பெருக்கினால் வரக்கூடிய தொகை ரூ. 61,93,130. ஏறக்குறைய ரூ. 62 லட்சம். உடனே பலரும் இந்த தொகையை பார்த்து கவலைப்படுவதுண்டு. பெரிய தொகை, ஆனால் வருடங்கள் அதிகம். நாம் கட்டக்கூடிய தொகை மாதா மாதம் ஒரே தொகைதான். ஆனால் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கும். அதை கணக்கில் கொள்ளவேண்டாம்.

அந்த 25 லட்சம் ரூபாயை நாம் வங்கியில் போடும்போது நமக்கு 8% வட்டி கொடுத்தால் வருடா வருடம் நமக்கு 2 லட்சம் கிடைக்கும் அதை 20 வருடங்களோடு பெருக்கினால் 2x20=40 லட்சம் மற்றும் நம்முடைய அசல் 25 லட்சம் அதில் ரூ. 65 லட்சம் கிடைக்கும். மேலும் 20 வருடம் என்பதால் நம்முடைய வாழ்விலும் நல்ல முன்னேற்றம் இருப்பதால் இதை சமாளிப்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சொல்லலாம்.

வீட்டுக்கடனை சீக்கிரம் அடைத்தல் என்பது சரியான செயல் இல்லை. வீட்டுக் கடனுக்கு வரிச்சலுகை கிடைக்கும். இரண்டாவது நமக்கு கிடைக்கக்கூடிய கடன்களில் மிகவும் குறைந்த வட்டிக்கு கிடைப்பது இது ஒன்றுதான். ஆனாலும் இதை நம் வயதுக்கேற்ப அதிக கால அவகாசம் எடுத்துகொள்வதும் நல்லது.

அதே சமயம் கந்து வட்டியில் ரூ. 5 லட்சம் வாங்கினால் 3 வட்டி என எடுத்துக்கொண்டால் மாதம் ரூ.15,000 கட்டவேண்டும். 3 வருடத்தில் நாம் வாங்கிய பணத்தை விட அதிகமாக வட்டியே கட்டி இருப்போம். 15x36=540. அதாவது ரூ. 5.40 லட்சம். இன்னும் அசல் அப்படியே இருக்கும்.

மேலே சொன்ன இரண்டு உதாரணங்களும் மிகக்குறைவு மற்றும் மிக அதிகமான வட்டிகள். மற்றவை யாவும் இதற்குள் அடங்கும். ஒருவருக்கு இதர வழிகளில் கடன்கள் அதிகம் இருந்தால் 5 வருடத்திற்கு முன்பு வாங்கிய வீட்டின் மதிப்பு இப்போது உயர்ந்திருக்கும். அதற்கேற்ப கூடுதல் பணம் வாங்கினால் அதை மற்ற கடன்களுக்கு வட்டி கொடுத்து அடைத்து விடலாம்.

கடன் மறுசீரமைப்பு மிகவும் முக்கியமான ஒன்று. கடன்களை சீராக்கவில்லை என்றால் ஏற்கெனவே சொன்னதுபோல எவ்வளவு சம்பாதித்தாலும் வீண்தான். இதைப்பற்றி தெரியாததால்தான் பலர் அவதிப்படுகின்றனர். நிதி ஆலோசகரின் உதவியுடன் சரி செய்துகொள்வது நல்லது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை கேள்விப் பட்டிருக்கிறோம் அதுபோல கடன் இல்லாமல் இருந்தால் தான் நம்மால் முதலீடு செய்வது, மேலும் அதைப்பெருக்குவது என்று நினைக்க முடியும். நாம் எவ்வளவு சம்பாதிக் கிறோம் என்பது முக்கியமில்லை. மாத இறுதியில் நம்மிடம் எவ்வளவு பணம் மிச்சப்படுகிறது, அதை எவ்வாறு திறம்பட முதலீடு செய்கிறோம் என்பதில் தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது. கடன் கொஞ்சம் நம்மை அழுத்த ஆரம்பித்தவுடன் அதற் கான தீர்வை தேடவேண்டும். இல்லை கொஞ்சம் நாமே சமாளிக் கலாம் என்று நினைப்பது பெரிய அழிவைத் தேடுவதற்கு சமம்.

சாராம்சம்: கடன் வாங்காமல் இருக்க முடியாது என்பது எப்படி உண்மையோ அதேபோல அதிக கடன் ஆபத்து என்பதும் உண்மை. நீண்ட காலத்துக்கு கடன் வாங்குகிறீர்கள் என்றால் வரும் நாட்களில் சம்பளம் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் முதலியவற்றை யோசித்தே முடிவெடுக்கவேண்டும்.

பலர் எளிதாக கடன் கிடைக்கிறது என்று பார்க்கக் கூடிய எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள். மேலும் இன்று வீடு தேடி வந்து கடன் கொடுக்கிறார்கள். தினசரி மொபைல் போனில் கூப்பிட்டு கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதால் நாம் இதில் எளிதாக மாட்டிக்கொள்கிறோம்.

இயந்திரத்தனமான இன்றைய வாழ்வில் நமக்கென்று நேரம் ஒதுக்காததே இதற்கு முக்கிய காரணம். வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் ஒதுக்கி நம்முடைய வாழ்வை அசை போட்டால் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கடன் வாங்கும்போதே பொறுப்புடன் செயல்பட்டால் கடன் சீரமைப்பு நிலைக்கே நாம் வரவேண்டியதில்லை. சிலரைப் போல பணத்தை முதலீடு செய்து அதை பெருக்குவதில் நாம் கவனம் கொண்டிருப்போம். கடனிலிருந்து மீண்டு பணம் செய்யலாம்! வாருங்கள்.
padmanaban@fortuneplanners.com

Monday 21 July 2014

My 42nd Article In The Tamil Hindu Dated 21st July 2014 About How Much To Invest In Equities?


எத்தனை சதவிகிதம் சேமிப்பது? - பா. பத்மநாபன்



பல வாரங்கள் முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றையும் அதனுடைய ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் குறித்து பார்த்தபோது பலரும் ஒருமித்தமாக ஒப்புக் கொண்ட விஷயம் பங்கு சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யலாம்.

அதில் கண்டிப்பாக பணம் செய்ய முடியும். நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் காத்திருத்தல், உணர்ச்சி வயப்படாமல் இருத்தல், மேலும் அதற்கான நேரத்தை ஒதுக்குதல், கடைசியாக ஒரு நிதி ஆலோசகரின் கண்காணிப்பில் இவற்றை செய்ய வேண்டும். பலருக்கு பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

உதாரணமாக ஒருவரிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பு வந்தால் அவர் 20%க்கு மேல் முதலீடு செய்ய மாட்டார். அந்த முதலீடு 100% ரிடர்ன்ஸ் கொடுத்தால் கூட அவருக்குக் கிடைப்பது 40 ரூபாய்தான்.

ஒரு முதலீட்டு வாய்ப்பு நம்முடைய கண்ணுக்குத் தெரிந்தால் அதை அலசி ஆராய்ந்து அது சிறந்த முதலீடு என்று தோன்றினால் 50 முதல் 75% வரை முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

இப்போது பரவலாக நாம் கேள்விப்படக்கூடிய ஒரு சொல் நீலக்கடல் யுக்தி. அதாவது ஆங்கிலத்தில் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்று பெயர். எல்லோரும் ஒரே இடத்தில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் போது போட்டி இல்லாத அதாவது போட்டி மிகக் குறைவாக இருக்கும் இடத்தில் நாம் பங்கு பெற்றால் பெரிய வெற்றிக்கு நாம் சொந்தக்காரர்களாகி விடுவோம்.

முதலீட்டிலும் இந்த வகையான உத்திகளை நம்மால் உணர முடியும். இதில் 2 வகை உள்ளன, `சிவப்புக் கடல்’ மற்றும் `நீலக் கடல்’. சிவப்புக் கடல் என்பது வெகு காலமாக இருக்கும் முதலீட்டு திட்டங்கள். இதில் பலரும் முதலீடு செய்வதால் கிடைக்கக் கூடிய லாபம் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய முதலீடுகளைத் தவிர்க்கவும். நீலக் கடல் முதலீடுகள் என்பது ஒரு சிலரே பங்கு பெறுவது; பலருக்கு நம்பிக்கை இல்லை; நம்பிக்கை உள்ளவர்கள் பெருமளவில் முதலீடு செய்வதால் எல்லோருக்கும் பங்கிடத் தேவை இல்லை.

இன்று நீலக்கடல் முதலீடு வரும் 5 ஆண்டுகளுக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. இதைக் கண்டு கொள்வது எளிது. ஏனெனில் இதில் யாருக்கும் முதலீடு செய்ய விருப்பமும் இல்லை நம்பிக்கையும் இல்லை. மாறாக `சிவப்புக் கடல்’ முதலீடான ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தையே விரும்புகிறார்கள். முதலில் இந்த முதலீடு கடந்த சில வருடங்களில் நல்ல ரிடர்ன்ஸ் கொடுத்துள்ளது.

இரண்டாவது எல்லோரும் இதை விரும்புவதால் அதில் கிடைக்கும் லாபம் பிரிக்கப்படுவதால் பெரியதாக பணம் செய்யும் வாய்ப்பு இன்னும் சில வருடங்களுக்குக் கிடையாது.

பங்கு சார்ந்த முதலீடுகள் மொத்த இன்வெஸ்ட்மெண்டில் இந்தியா முழுவதும் 4% கூட கிடையாது. மேலும் ஒரு தனி நபரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சேமிப்பில் 90% க்கும் மேல் வீட்டுக் கடன், இன்சூரன்ஸ் பாலிசி, வைப்பு நிதி, சிட் பண்ட் முதலியவை. இது எதுவுமே பணத்தை பெருக்கக் கூடிய முதலீடுகள் இல்லை. நீங்கள் வாங்கிய 30 லட்சம் ரூபாய் வீடு தற்போது ஒரு கோடியாக  இருந்தால்  நீங்கள் அதை விற்றுவிட்டு அதைவிட குறைந்த இடத்தில் வாங்கவேண்டும். அல்லது வாடகைக்குச் செல்ல வேண்டும். ஒரு கோடி ரூபாய் வீடு என்பது ஒருவர் புதிதாக வாங்கினால் 1 லட்சம் மாத தவணை கட்ட வேண்டும். அதாவது நாம் வாங்கிய வீட்டிற்கு இப்போது ஒரு லட்சம் வாடகை. அப்படி இருக்கும்போது நாம் அதிகமாக நம்முடைய வீட்டுக்கு வாடகை தருகிறோம் என்றுதானே அர்த்தம்.

நம்முடைய சம்பளத்தில் குறைந்தது 20% இந்த முதலீட்டிற்கென ஒதுக்க வேண்டும். இத்தகைய முதலீடுகள் குறைந்தது 10 முதல் 20 ஆண்டு அடிப்படையில் இருந்தால் 15% கூட்டு வட்டியை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். PPF முதலீடு 15 வருடம், பெரும்பாலான இன்சூரன்ஸ் பாலிசிகள் 20 வருடம். இதில் போட்ட பணத்தை அடிக்கடி பார்க்க வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்ற எண்ணமோ பலருக்கும் ஏற்படுவதில்லை.

நமக்கு உள்ள மிகப்பெரிய சவால் ஏற்ற இறக்கத்தில்தான், காத்திருத்தலில் இல்லை. அப்படி இருக்கும்போது ஒரு முதலீட்டு திட்டம் கடந்த பல ஆண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் நல்ல ரிடர்ன்ஸ் கொடுத்திருந்தால் நாம் அதில் கொஞ்சமாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.

1984-ம் ஆண்டு தனி மெஜாரிட்டி கிடைத்தபோது, அடுத்த 5 ஆண்டுகளில் பங்கு சந்தை 24% கூட்டு வட்டி கொடுத்தது. இப்போது மீண்டும் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கிறது, முதல் பட்ஜெட்டும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கி பெரும்பாலான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் கடந்த 6 வருடங்களாக கூட்டு வட்டியில் கணக்கிட்டால் சந்தை 3% கூட வளரவில்லை. கடந்த கால ரிடர்ன்ஸ் உத்திரவாதம் இல்லை ஆனால் வரும் காலம் எவ்வாறு செயல்படும் என்று அதை உள்நோக்கினால் நம்மால் உணரமுடியும்.

குறைந்தது 20% பங்கு சார்ந்த முதலீட்டில் நாம் முதலீடு செய்யலாம். இங்கு நாம் நம்முடைய நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. இது நாம் ஒரு பிசினசில் இணைந்துள்ளது போல, எப்படி ஒரு பிசினசில் 3 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நல்ல ரிடர்ன்ஸ் கொடுக்குமோ அதேபோல இதிலும் நிறைய கிடைக்கும். அதை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருந்தாலே போதுமானது.

சாராம்சம்: இந்த முதலீடு பெரும்பாலும் நம்மிடம் உள்ள மீதமுள்ள பணம் அல்லது நாம் கொஞ்சம் செலவைக் கட்டுப் படுத்தி மிச்சம் பிடிக்கக் கூடிய பணம். மேலும் இந்த பணம் நம்முடைய நீண்ட கால தேவைக்கு பயன்படக் கூடியது, நாளையே தேவைப்படாது. அவ்வாறு இருக்கும் போது இந்த முதலீட்டில் கொஞ்சம் கூட ரிஸ்க் கிடையாது. இது தினசரி டிரேடிங் மற்றும் டெரிவேடிவ், கமாடிட்டி டிரேடிங் முறையோடு ஒப்பிடக்கூடாது. வரக்கூடிய 5 வருடங்களில் கண்டிப்பாக பணம் செய்ய முடியும், அதனால் பணம் இருந்தால் முழுமையாகவோ அல்லது மாதா மாதமோ சேமிப்பது நல்லது. குறைந்தது 20% சேமித்தால் நல்லது. வாருங்கள் தைரியமாக, பணம் செய்வோம்.​

Monday 14 July 2014

My 41st Article In The Tamil Hindu Dated on 14th July 2014, About Investment Returns Versus Investor Returns

முதலீட்டு வருவாய் முதலீட்டாளரின் வருவாயிலிருந்து வேறுபடுவது ஏன்? - பா. பத்மநாபன்

 

எப்போதாவது ஒருவர் சிறந்த முதலீட்டைப் பற்றிச் சொன்னால் உடனே சிலர், நான் அதில் நிறைய இழந்து விட்டேன், அது எல்லாம் ஏமாற்று வேலை என்ற பதில் உடனடியாக வந்து விடும். கொஞ்சம் உற்று நோக்கினால் சில திட்டங்கள் உண்மையாகவே ஏமாற்றுத் திட்டமாக இருக்கும். பல திட்டங்கள் நாம் அதனுடைய ரிஸ்க் மற்றும் அதனுடைய ஆற்றலை புரிந்து கொள்ளாமல் எடுத்த முடிவாகவே இருக்கும்.

நாம் புரிந்து முதலீடு செய்யவில்லை என்று சொல்வதற்கு நம்முடைய ஈகோ இடம் கொடுக்காது; உடனே பழியை மற்றவர் பேரில் திருப்பிவிடுவோம்.

மற்றொன்று சேவிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய முதலீடு, அதில் நமக்கு எவ்வளவு காலம் இணைந்திருக்கவேண்டும், அதற்கு என்ன ரிடர்ன்ஸ் என்பது முன்பே தெரியும். இது கண்டிப்பாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். மேலும் இதை ஒரு அரசாங்கம் நடத்துவதால் அல்லது ஒரு அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் நமக்கு பாதுகாப்பானது.

அதே சமயம் முதலீடுகள் கால வரையறைக்கு அப்பாற் பட்டது, ரிடர்ன்ஸ் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைந்தோ கிடைக்கக்கூடியது. இதில் உத்திரவாத வட்டி தருகிறேன் என்று சொன்னால் ஏமாற வேண்டாம். அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் உங்களுக்கு சந்தையின் ரிஸ்க் மட்டுமே, நிறுவனம் ஓடிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு.

நம்மில் பலருக்குப் பணத்தைக் கையாள்வதற்கான திறமைகள் குறைவு என்பது மறுக்கப்படாத உண்மை. அதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய முன்னோர்களிடம் இவ்வளவு பணம் இருந்ததில்லை, எனவே அதை அவர்கள் நமக்கு சொல்லி தரவில்லை.

திடீரென்று பணம் வந்தவுடன் அதற்கு வேட்டு வைப்பதற்கு பல ரூபத்தில் வெளியில் காத்துக் கொண்டிருப்பதால் நாம் நிறைய சம்பாதித்தும் கஷ்டப்படுகிறோம். நாம் நினைத்தால் அடுத்த சந்ததியினருக்குப் பணத்தை எப்படி பாதுகாப்பது, அதை எவ்வாறு பெருக்குவது என்று சொல்லித்தரமுடியும்.

முதலீடு என்பது பெரும்பாலும் உணர்ச்சி மிகுந்தது, அதைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இன்று பலர் நிறைய சம்பாதிக்கிறார்கள் அப்படி இருக்கும்போது ஏன் பலரும் கஷ்டப்படுகிறார்கள்? காரணம், நம்முடைய பெரும்பாலான முடிவுகள் சிந்திக்காமல் அந்த நொடியில் தோன்றக்கூடிய விருப்பத்திற்கேற்ப செயல் படுவதால்தான்.

சில செடிகள் மற்றும் மரங்கள் சில மாதங்களில் பலன் தரக் கூடியவை, இன்னும் சில வகைகள் வருடங்களில் பலன் தரும். சில அடுத்த தலை முறையில் தான் பலன்தரும். அதே போல பங்கு சார்ந்த முதலீடுகள் பெரும்பாலும் 5 முதல் 7 வருட முடிவில் கடந்த 35 வருடங்களில் நல்ல பலன் தந்திருக்கிறது.

நம்மில் பலர் அது சரியாக செயல்படாதபோது அதில் முதலீடு செய்யாமல், அது உச்சத்தில் வந்தபோது முதலீடு செய்து அது கடந்த மாதங்களில் செயல்பட்டது போல இருக்கும் என்று நினைத்து முதலீடு செய்வதால் உடனடியாக பணத்தை எடுத்து விடுகிறார்கள்.

பங்கு சார்ந்த முதலீடுகள் என்பது நீங்கள் ஒரு பிசினஸில் இணைந்திருப்பதுபோல, அவ்வாறு இருக்கும்போது காத்திருத்தல் அவசியம். நான் சொல்லக்கூடிய அனைத்து விதமான முதலீட்டு ரிடர்ன்ஸ் யாவும் நீண்ட காலம் இணைந்திருந்தது, ஆனால் முதலீட்டாளரின் ரிடர்ன்ஸ் அவர்களுடைய மனநிலைக்கேற்ப அடிக்கடி மாறுபடுவதால் பலர் பயன் பெறவில்லை. இதில் உள்ள பெரிய சவால் முதலீட்டின் திட்டங்களில் இல்லை. இவை, முதலீட்டாளரின் மன வேறுபாடே இந்த மாதிரியான வித்தியாசத்திற்கு காரணம்.

பெரும்பாலான முதலீட்டு திட்டங்களில் அதை பரிந்துரை செய்யக்கூடிய ஆலோ சகர்அவர்கள் சொன்ன முதலீட்டு ரிடர்ன்ஸ் வருகிறதா என்று நம்முடன் கடைசி வரை வருவதில்லை. அது பெரும்பாலும் பரிவர்த்தனை நிலையிலே உள்ளது. நீண்ட கால உறவுகள் / தொடர்புகள் இருப்பதில்லை எனவே அந்த முதலீட்டைக் கண்காணிப்பதில்லை.

பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டமான மியூச்சுவல் பண்டில் இந்த வித்தியாசம் குறைவு. காரணம் ஆலோசகர் அதைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, முதலீட்டாளருக்கு ஏற்படும் சந்தேகங்களும், பயங்களும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யபடுவதால் நல்ல ரிடர்ன்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த கால ரிடர்ன்ஸ் என்பது ஒரு முதலீட்டு திட்டத்திற்கு உண்டான ஆற்றல் எவ்வளவு என்பதை பறை சாற்றுவது. அது வரக்கூடிய காலங்களில் அதே அளவோ, குறைந்தோ அதிகமோ வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இந்த மாதிரியான ரிடர்ன்ஸ் வருவதற்கான சாத்திய கூறுகள் நிறைய. அதே சமயம் மற்ற முதலீடுகளில் யாருடைய துணையும் இல்லாமல், மேலும் கடந்த காலங்களில் நிலையான ரிடர்ன்ஸ் தராத முதலீடுகளில் பலரும் ஒரு நம்பிக்கையின் பெயரில் முதலீடு செய்வது மிகப்பெரிய ரிஸ்க்.

சாராம்சம்: இன்றைய சூழலில் பலருக்கு நேரமும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒரு உண்மை. அவ்வாறு உள்ளவர்கள் ஒரு ஆலோசகரின் உதவியோடு இந்த மாதிரி முதலீடுகளில் இணைந்திருந்தால் கண்டிப்பாக நன்றாக பணம் செய்ய முடியும்.

நாம் இன்று சமூக வலை தளங்களில் நம்முடைய நேரங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் செலவிடக்கூடிய நேரத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என்று ஒதுக்கினால் நாம் பல முதலீடுகளையும் அதன் பயன்களையும் நன்கு உணர முடியும். இது நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யக்கூடியது, அதுவே வரக் கூடிய காலங்களில் நம் சந்ததியினர் நன்றாக முதலீடு செய்து வாழ்வதற்கும் வித்திடும் என்று சொன்னால் மிகையாகாது. நேரம் ஒதுக்குங்கள்! முதலீடுகளை அறிந்து கொள்ளுங்கள்! நிறைய பணம் செய்யலாம்.
padmanaban@fortuneplanners.com

Monday 7 July 2014

My 40th Article In The Hindu Tamil Dated 7th July 2014, About The Importance of Portfolio Review

போர்ட்போலியோ திறனாய்வின் அவசியம் - பா.பத்மநாபன்

 


நாம் பலதரப்பட்ட முதலீடுகளை செய்திருப்போம். சில முதலீடு களை அதன் பயனை உணர்ந்து செய்திருப்போம், பல முதலீடுகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் செய்யப்பட்டிருக்கும். இன்னும் சில கடைசி நிமிடத்தில் வருமான வரி விலக்கு தேவைக்காக செய்யப்பட்டிருக்கும்.

முதலீட்டுடன் பற்று வேண்டாம்

நான் சந்திக்கும் பலர் உணர்வு பெருக்கோடு வாழ்க்கையை கடத்து கிறார்கள். பலருக்கு தான் வாங்கிய முதல் வீடு, இன்ஷூரன்ஸ் பாலிசி முதலியவற்றில் தேவையில்லாமல் ஒரு பற்றுதல் இருக்கிறது. அதனால் இந்த கால கட்டத்தில் பலன் இல்லை என்று தெரிந்தாலும் அதை விட்டு விலகுவதில்லை. மேலும் தன்னுடைய போர்ட்போலியோ திறனாய்வுக்கு எடுத்து செல்லும்போதும் அதைப் பற்றி ஆலோசனை கூறும் ஆலோசகர் சிலவற்றை பற்றி கமெண்ட் செய்யும்போது அதை பர்சனலாக எடுத்துக்கொள்வதும் உண்டு. இவர் யார் என்னுடைய செலக்க்ஷன் பற்றி குறை கூறுவது, இந்த பாலிசிகளை தவிர்த்து புதியதாக வாங்குவதை பற்றி சொல்லுங்கள் என்று நிர்பந்தம் செய்பவர்கள் பலர்.

போர்ட்போலியோ திறனாய்வு செய்வதால் நம்மால் தேவை இல்லாத முதலீடுகளை தவிர்க்கவும், வாங்கியவற்றில் இருந்து வெளியே வரவும் இயலும். நம்மில் பலர் அதற்கென நேரம் ஒதுக்கி அதனுடைய செயல்பாடுகளை அறிவதற்கு விரும்புவதில்லை. திடீரென்று தேவைப்படும்போது அவற்றை பற்றி அறிவது, ஒரு நோயை பல நாட்கள் கண்டும் காணாமலும் இருந்து அது முற்றிய பின்பு பார்ப்பதற்கு சமம்.

மேலும் நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எல்லை என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது முன்பு எப்போதோ வாங்கிய பணவீக்கத்தை கட்டுப்படுத்தாத முதலீடுகளை எப்படி தொடருவது? சிந்திக்க வேண்டிய விஷயம்.

அசல் மட்டுமே முக்கியம் அல்ல
எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வாங்கியதில் தப்பில்லை, அது தற்போது உள்ள சூழலுக்கு உதவாது என உணர்ந்தால் அதிலிருந்து வெளியே வருவது நல்லது. எல்லோருக்கும் உள்ள மற்றொரு பழக்கம் எந்த முதலீடாக இருந்தாலும் அசலை இழந்து விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த அசலுக்கு பர்ச்சேசிங் பவர் உள்ளதா இல்லையா என்ற கவலை எல்லாம் கிடையாது. இது மிகவும் தவறு.

பெரும்பாலான பென்ஷன் பாலிசிகளில் அவர்கள் வருடா வருடம் என்ன தொகை கொடுப்பார்கள் என்று தான் சொல்வார்கள். நம்மில் பலர் 1 லட்சம் என்றவுடன், ஆஹா எவ்வளவு பெரிய தொகை என்று ஆச்சரியப்படுவர், அதை மாதா மாதம் கணக்கிட்டால் வெறும் 8,333 ரூபாய் தான்.

காலத்துக்கேற்ற மாற்றம் தேவை

தொரடர்ந்து பரிசீலனை செய்யும்போது தேவையற்ற முதலீடுகளை மாற்றியும், ஒரு முதலீடு கடந்த வருடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான வருமானம் கொடுத்திருந்தால் அதில் கொஞ்சம் பணத்தை மற்றொரு முதலீட்டிற்கு மாற்றி மீண்டும் போர்ட்போலியோவை சமன் செய்து கொண்டே இருந்தால் முதலீட்டின் ஏற்ற இறக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வரலாம். மேலும் காலத்திற்கேற்ப பல முதலீட்டு திட்டங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதைப்பற்றிய விஷயங்களை ஒரு நிதி ஆலோசகர் நிறைய தெரிந்து வைத்திருப்பார். இது போர்ட்போலியோ திறனாய்வின் போது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.

மற்றொரு தவறு என்னிடம் பணம் இல்லை, ஏற்கனவே எல்லா பணத்தையும் முதலீடு செய்துவிட்டேன் என்று சொல்வது. போர்ட்போலியோ திறனாய்வின் மூலம் தேவையற்ற முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நம்மால் கண்டிப்பாக சேமிக்கமுடியும். எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கவனிக்க தவறினால் சிறந்த வருமானத்தை வெளிப்படுத்தமுடியாது, வருடா வருடம் திறனாய்வு செய்வது மிகவும் முக்கியம். 8 வருடம் முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் மாதம் ரூ. 20,000 சம்பாதித்து வந்தார், இப்போது அவருடைய சம்பளம் ரூ. 1.50 லட்சம், ஆனால் இன்றும் என்னால் சேமிக்க முடியவில்லை என்ற எண்ணமே வெளிப்படுகிறது.

குறைந்த அளவு எது என்று கூறுவது மிகவும் கடினம். இந்த மாதிரி பல பேர் உள்ளார்கள், இவர்கள் உடனடியாக தங்களுடைய போர்ட்போலியோவை மறு பரிசீலனை செய்வதற்கு இது சரியான நேரம். 

எந்த ஒரு இனஷூரன்ஸ் பாலிசியை நடுவில் எடுத்தாலும் கண்டிப்பாக பணத்தை இழப்பது உறுதி, யூலிஃப் பாலிசிகளை தவிர. அதே சமயம் அதை நீண்ட நாள் தொடரும்போது நாம் போட்ட பணத்தைவிட கூட கிடைக்கும். ஆனால் அதனுடைய மதிப்பு, கண்டிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது. திறனாய்வில் அதைப்பற்றி அலசுவதால், சரண்டர் செய்யும்போது வரக்கூடிய இழப்பை வேறு முதலீட்டிற்கு மாற்றும்போது கண்டிப்பாக அந்த இழப்பை சரி செய்வதுடன் அந்த ரிடர்ன்ஸ் அதிகமாக வளருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த முதலீட்டை வருடம் ஒருமுறையோ அல்லது எப்போதெல்லாம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது திறனாய்வு செய்யவேண்டும்.

சாராம்சம்: இதனால் தேவை இல்லாத முதலீட்டிலிருந்து வெளியே வருவதுடன், வரும் காலத்தில் இந்த வகையான முதலீடுகளை இனம் கண்டு அதை தவிர்க்கவும் முடியும். வெளியே இருந்து பார்க்கும்போது நாம் நிறைய பணத்தை சேமிப்பதாக தோன்றும், ஆனால் அவற்றில் பல சரியான முதலீடாக இல்லாததால் நம்மால் நாம் நினைத்த மாதிரி இலக்குகளை அடைய முடியாது.

போர்ட்போலியோ திறனாய்வு செய்யவும், புதிய முதலீடுகளை தொடரவும் மிக சரியான தருணம் இது. கடந்த 6 ஆண்டுகளாக கொடுக்காத வருமானம் இன்னும் 5 வருடத்தில் சேர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். போர்ட்போலியோ திறனாய்வை தொடர்ந்து கவனிப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமை, இது உங்களுடைய பணம், அதற்கு நீங்களே பொறுப்பு, மற்றவர்களை குறை கூறுவதால் இழப்பு உங்களுக்குத் தான்.